RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S3

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78501486

முதன்மை சுற்றறிக்கை – கிசான் கிரெடிட் கார்டு (KCC- விவசாயி கடன்அட்டைத் திட்டம்.) திட்டம்

அறிவிப்பு எண் 2017-18/04
Ref.No.FIDD.CO.FSD.BC.7/05.05.010/2017-18

ஜூலை 03, 2017

தலைவர் / நிர்வாக இயக்குநர் /
தலைமை நிர்வாக அதிகாரி
அனைத்துப் பட்டயலிடப்பட்ட வர்த்தக வங்கிகள்
(சிறுநிதி வங்கிகள் உட்பட மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் நீங்கலாக)

அன்புடையீர்

முதன்மை சுற்றறிக்கை – கிசான் கிரெடிட் கார்டு (KCC- விவசாயி கடன்அட்டைத் திட்டம்.) திட்டம்

இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது கிசான் கிரெடிட் கார்டு திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. ஜுன் 30, 2017 அன்று கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் வங்கி வழங்கிய வழிகாட்டுதல்களை முதன்மை சுற்றறிக்கை பின்வரும் இணைப்பில் உள்ளபடி ஒருங்கிணைத்துள்ளது.

2. அந்த முதன்மைச் சுற்றறிக்கை இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளம் /en/web/rbi – த்தில் இடம்பெற்றுள்ளது.

இங்ஙனம்

(அஜய்குமார் மிஷ்ரா)
தலைமைப் பொதுமேலாளர்

இணைப்பு – மேலே குறிப்பட்டபடி


இணைப்பு

முதன்மை சுற்றறிக்கை – கிசான் கிரெடிட் கார்டு (KCC) திட்டம்

1. அறிமுகம்

வங்கிகள் ஒரு சீரான நடைமுறையை மேற்கொண்டு, விவசாயிகளுக்கு அவர்களின் சொத்துக்களின் அடிப்படையில் கிசான் கிரெடிட் கார்டு வழங்குவதற்காக 1998-ஆம் ஆண்டு கிசான் கிரெடிட் கார்டு (KCC) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனால் விவசாயிகள் உடனடியாக விதைகள், உரங்கள், பூச்சிக் கொல்லி முதலிய விவசாயப்பொருட்கள் வாங்கவும், அவர்களின் உற்பத்தித் தேவைக்காக பணத்தை எடுக்க அந்தக் கார்டுகளை உபயோகப்படுத்தலாம். இந்த திட்டம், மேலும் விவசாயிகளின் முதலீட்டுக் கடன் தேவைகள் அதாவது விவசாயம் தழுவிய மற்றும் பண்ணைசாரா நடவடிக்கைகளுக்காக 2004 ஆம் ஆண்டில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 2012-ஆம் ஆண்டு திரு. T. M. பசின், CMD இந்திய வங்கி, அவர்கள் தலைமையின் கீழ் பணிபுரிந்த ஒரு செயற்குழுவினரால் எளிமையாக்க மறுபரிசீலனை செய்யப்பட்டு, மின்னணு கிசான் கிரெடிட் கார்டு வழங்க ஏதுவாக ஆவன செய்யப்பட்டது. கிசான் கிரெடிட் கார்டு (KCC) திட்டத்தை நடைமுறைப்படுத்த வங்கிகளுக்கு விரிவான வழிகாட்டுதல்களை இந்தத் திட்டம் வழங்குகிறது. இத்திட்டத்தை அமல்படுத்தும் வங்கிகள், அவை இருக்குமிடம் / நிறுவனம் சார்ந்த சிறப்பு தேவைகளுக்குப் பொருந்தும் வகையில் இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டு செயல்படுத்த அவற்றுக்கு விருப்புரிமை உள்ளது.

2. திட்டத்தின் பயன்பாடு

பின்வரும் பாராக்களில் விளக்கப்பட்டுள்ள கிசான் கிரெடிட் கார்டு (KCC) திட்டத்தை வர்த்தக வங்கி, பிராந்திய கிராமப்புற வங்கிகள், சிறுநிதி வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் செயல்படுத்தவேண்டும்.

3. குறிக்கோள் / நோக்கம்

கிசான் கிரெடிட் கார்டு (KCC) திட்டமானது ஒற்றைச் சாளரத்தின் கீழ் வங்கி முறையிலிருந்து நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய மற்றும் எளிமையான நடைமுறையுடனும் போதுமான மற்றும் சரியான நேரத்தில், விவசாயிகளுக்கு அவர்கள் சாகுபடி செய்யவும், மேலும் கீழே குறிப்பிட்ட மற்றைய தேவைகளுக்காகவும் கடன் உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

  1. பயிர்கள் சாகுபடி செய்ய குறுகியகால கடன் தேவைகளை சந்திக்க

  2. அறுவடைக்குப் பின் உள்ள செலவுகள்

  3. விளைபொருளைச் சந்தைப்படுத்துவதற்காக கடன்

  4. விவசாயிகளின் வீட்டுத் தேவைகளுக்கான கடன்

  5. பண்ணைச் சொத்துக்கள் பராமரிக்கவும், விவசாயம் தழுவிய வேலைகளுக்குமான மூலதனம்

  6. விவசாயமும் அதைத் தழுவிய வேலைகளுக்கான முதலீட்டுக் கடன் தேவைகள்

குறிப்பு – மேற்குறிப்பிட்ட (a) முதல் (e) வரையிலுள்ளவற்றின் கூட்டுத்தொகுதி குறுகிய கால கடன் வரம்புக்கு உட்படும். மேலும், (f)-ல் குறிப்பிடப்பட்ட தேவை நீண்டகால கடன் வரம்புக்கு உட்படும்.

4. தகுதிகள்

  1. விவசாயிகள் – சொந்த நிலம் உள்ள விவசாயி, தனி நபர் / கூட்டாகக் கடன் பெற்றவர்கள்

  2. குத்தகை விவசாயிகள், பத்திரமல்லாமல் வாய்மொழியாக குத்தகை விவசாயம் செய்பவர், கூட்டு சாகுபடியாளர்கள்

  3. குத்தகை விவசாயிகள், கூட்டு சாகுபடியாளர்கள் உட்பட சுய உதவிக்குழுக்கள் (SHGs) அல்லது கூட்டாகப் பொறுப்பேற்கும் குழுக்கள் (JLGs)

5. கடன் வரம்பு / கடன் தொகை

கிசான் கிரெடிட் கார்டு (KCC) திட்டத்தின் கீழ் கடன் வரம்பு பின்வருமாறு தீர்மானிக்கப்படும்.

5.1. குறு விவசாயிகள் தவிர அனைத்து விவசாயிகளுக்கு

5.1.1 முதல் வருடம் குறுகிய கால வரம்பு (ஒரு ஆண்டில் ஒரு பயிர் பயிரிட) பின்வருமாறு தீர்மானிக்கப்படும்.

அந்தக் குறிப்பிட்ட பயிருக்கு உரிய பயிர் நிதி அளவீடு (மாவட்ட அளவில் தொழில்நுட்பக் குழுவால் முடிவு செய்யப்பட்டது) X சாகுபடி செய்யப்பட்ட நிலத்தின் பரப்பளவு + வரம்பில் 10 சதவிகிதம் - அறுவடைக்கு பிந்தைய / வீட்டுத்தேவை / நுகர்வுக்கான தேவை + வரம்பில் 20 சதவிகிதம் – விவசாய சொத்துக்களின் பராமரிப்பு செலவுக்காக + பயிர்க்காப்பீடு மற்றும் / அல்லது விபத்துக் காப்பீடு (PAIs) உட்பட, மருத்துவக் காப்பீடு மற்றும் சொத்துக் காப்பீடு.

5.1.2 இரண்டாவது மற்றும் அதற்கடுத்த ஆண்டுக்கான வரம்பு

முதலாம் ஆண்டு பயிர் சாகுபடிக்காக மேற்குறிப்பிட்டபடி கணக்கிடப்பட்ட வரம்பு + வரம்பில் 10 சதவிகிதம் அதிகரிக்கும் சாகுபடி செலவிற்காக / பின்வரும் ஒவ்வொரு ஆண்டும் (2, 3, 4, 5-ம் ஆண்டுகள்) அதிகரிக்கும் பயிர் நிதி அளவீட்டுக்காக மற்றும் கிசான் கிரெடிட் கார்டின் மதிப்புக் காலத்திற்கென திட்டமிடப்பட்ட கடன் தொகை (உதாரணம்-I இணைக்கப்பட்டுள்ளது).

5.1.3 ஓராண்டில் ஒரு பயிருக்கும் அதிகமாக சாகுபடி செய்ய

முதலாமாண்டில் மேலே குறிப்பிட்டுள்ளபடியே சாகுபடி செய்யப்படும் பயிர்களின் வகைக்கேற்ப, வரம்பு நிர்ணயிக்கப்படும். அந்த வரம்புடன் கூடுதலாக வரம்பில் 10 சதவிகிதம் அதிகரிக்கும் சாகுபடி செலவிற்காக / பின்வரும் ஒவ்வொரு ஆண்டும் (2, 3, 4, 5-ம் ஆண்டுகள்) அதிகரிக்கும் பயிர் நிதி அளவீட்டுக்காக. விவசாயிகள் அடுத்த 4 வருடங்களுக்கு அதே பயிர் சாகுபடி முறையை மேற்கொள்வதாகக் கருதப்படுகிறது. ஒருவேளை விவசாயி அடுத்த ஆண்டில் பயிரிடும் முறையை மாற்றினால், கடன் வரம்பு மாற்றி கணக்கிடப்படலாம் (உதாரணம்-I இணைக்கப்பட்டுள்ளது).

5.1.4 முதலீட்டிற்கான காலக் கடன்

நில மேம்பாடு, சிறுபாசன வசதி, விவசாயத்திற்கு எந்திர சாதனங்கள் வாங்குதல், விவசாயம் சார்ந்த நடவடிக்கைகள் ஆகியவற்றில் முதலீடு செய்வதற்காக காலக் கடன் வழங்கப்படுகிறது. வங்கிகள் காலக் கடன் மற்றும் வேலை முதலீட்டிற்கான வரம்பை பின்வரும் விஷயங்களைக் கருத்தில் கொண்டு தீர்மானிக்கலாம் - விவசாயி வாங்க திட்டமிடும் எந்திரம் அல்லது சொத்தின் மதிப்பு, ஏற்கனவே மேற்கொண்டு வரும் பண்ணை சார்ந்த நடவடிக்கைகள், ஏற்கனவே இருக்கும் கடனோடு வரவிருக்கும் கடனையும் சேர்த்துக் கணக்கிட்டுப் பார்க்கையில் விவசாயியின் கடனை அடைக்கும் திறன் பற்றி வங்கியின் மதிப்பீடு,வரவிருக்கும் 5 ஆண்டுகளில் விவசாயி செய்யவிருக்கும் முதலீடு மற்றும் விவசாயியின் கடனை அடைக்கும் திறன் பற்றி வங்கியின் மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் நீண்டகாலக் கடனுக்கான வரம்பு நிர்ணயிக்கப்படவேண்டும்.

5.1.5 அதிகபட்ச அனுமதிக்கப்படும் வரம்பு

5வது ஆண்டுக்கான குறுகிய காலக்கடன் வரம்புடன் திட்டமிடப்பட்ட நீண்டகாலக் கடன் தேவைக்கான வரம்புத் தொகையைச் சேர்த்தால், அதிகபட்ச அனுமதிக்கப்படும் வரம்புத் தொகை கிடைக்கும். அதுவே, கிசான் கிரெடிட் கார்டின் வரம்பாகும்.

5.1.6 உபவரம்புகள் நிர்ணயம்

  1. குறுகிய காலக் கடன் மற்றும் காலக் கடன் ஆகியவற்றிற்கு வெவ்வேறு விகிதங்களில் வட்டி விதிக்கப்படுகிறது. தற்சமயம் 3 லட்சம் வரையுள்ள குறுகியகாலப் பயிர்க் கடன்கள் இந்திய அரசாங்கத்தின் வட்டிக் குறைப்புத் திட்டம் / காலத்தில் கடன் அடைத்தால் கிடைக்கும் ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் உள்ளன. மேலும், கடனைத் திருப்பித் தருவதற்கான அட்டவணை மற்றும் கட்டளைகள், இந்த இரண்டு வகைக் கடன்களுக்கும் வேறுபடுகின்றன. ஆகவே, நடைமுறை மற்றும் கணக்கீட்டு வசதிக்காக, அட்டையின் வரம்புத் தொகையானது, சேமிப்புக் கணக்குடன் இணைந்த குறுகிய காலப் பணக்கடன் வரம்பு மற்றும் காலக்கடன்கள் என்று உப பிரிவுகளாக வரம்புகள் நிர்ணயிக்கப்படுகின்றன.

  2. குறுகிய கால பணக்கடனில் பணம் எடுக்கும் வரம்பு, பயிரிடும் முறையைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும். பயிர் உற்பத்தி, பண்ணைச் சொத்துக்கள் பழுது மற்றும் பராமரிப்பு, நுகர்வு ஆகியவற்றிற்கான தொகையை விவசாயி தன் சௌகரியப்படி எடுப்பதற்கு அனுமதிக்கப்படலாம். பொதுவாக 5 ஆண்டிற்கான வரம்பை நிர்ணயிக்கும்போது, தோராயமாக 10 சதவிகிதம் உயர்த்தப்படும். ஒருவேளை மாவட்ட அளவிலான தொழில்நுட்பக் குழு, ஒரு ஆண்டில், பயிர் நிதி அளவீட்டினை இதைவிடவும் அதிகமான அளவில் உயர்த்தித் திருத்தியமைத்திட்டால், விவசாயியிடம் கலந்து ஆலோசித்து, பணம் எடுக்கும் வரம்பு மாற்றியமைக்கப்படலாம். இத்தகு மாற்றங்களால் அட்டை வரம்பே உயர்த்தப்படவேண்டுமானால், (4-ம், 5-ம் ஆண்டு) அவ்வாறே செய்யப்படலாம். அத்துடன் விவசாயிக்கும் அது தெரிவிக்கப்படலாம்.

  3. முன் மொழியப்பட்ட முதலீடுகளின் கால அளவிற்கேற்ப, முதலீடுகளின் தன்மை, மற்றும் திருப்பிச் செலுத்தும் திட்டத்தின் அடிப்படையில், காலக் கடன்களின் தவணைகளை எடுப்பதற்கு அனுமதிக்கப்படலாம். இது எவ்வாறாயினும், விவசாயியின் மொத்தக் கடன் பொறுப்பு என்பது அந்த வருடத்திற்கான பணமெடுக்கும் வரம்பிற்குள் இருக்கவேண்டும்.

  4. எங்கெல்லாம் இவ்வாறு அட்டை வரம்பு / கடன் பொறுப்பு உயர்த்தப்பட்டு அவற்றிற்குக் கூடுதலான பிணையம் தேவைப்படுகிறதோ அப்பொழுது வங்கிகள் அவற்றின் கொள்கைப்படி இணைப் பிணையம் பெறலாம்.

5.2 குறு விவசாயிகளுக்காக

சொந்தமான நில அளவு, பயிரிடும் பயிர்கள் ஆகியவை அடிப்படையாகக் கொண்டு ஒரு மாறுபாடுடைய ரூ. 10,000-லிருந்து ரூ. 50,000 வரை வரம்புடன் கூடிய (நெகிழ்வுத் தன்மையுடைய KCC) கார்டுகள் கொடுக்கப்படலாம். அறுவடைக்கும் பிந்தைய கிடங்கு சேமிப்பு தொடர்பான கடன் தேவை, மற்றும் பிற பண்ணை செலவுகள், நுகர்வு தேவை, பண்ணை உபகரணங்கள் கொள்முதல், சிறு பால்பண்ணை / வீட்டுக் கோழிப் பண்ணை ஆகியவற்றிற்கு நிலத்தின் மதிப்பைப் பொருட்படுத்தாமல் கிளை மேலாளரின் மதிப்பீட்டன்படி இந்த கடன் வரம்பு நிர்ணயிக்கப்படலாம். இதே அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கான ஒட்டுமொத்தக் கடன் அட்டை வரம்பு நிர்ணயிக்கப்படவேண்டும். பயிர் சாகுபடி முறையில் / பயிர் நிதி அளவீட்டில் மாற்றம் ஏற்பட்டு, அதிகமான வரம்பு தேவைப்படுகிறதோ, அந்த வரம்பு பாரா 4.1 (எடுத்துக்காட்டு II)-ல் உள்ளபடி கணக்கெடுக்கப்படும்.

6. பட்டுவாடா

6.1 KCC-ன் வரம்பில் குறுகியகாலக் கடன் பகுதிக்குரிய வரம்பு என்பது சுழற்சிப் பணக்கடன் வசதி தன்மையைக் கொண்டுள்ளது. பற்றுகள் மற்றும் வரவுகளின் எண்ணிக்கைக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது. நடப்பு சீசன் / ஆண்டுக்கான பணம் எடுக்கும் வரம்பிற்குள் பின்வரும் வழிமுறைகளைப் பயன்படுத்தி பணம் எடுக்கப்படலாம்.

  1. கிளை வழியாக

  2. காசோலை வசதி மூலம்

  3. ஏடிஎம் / டெபிட் கார்டு மூலம்

  4. வங்கி வர்த்தக முகவர்கள் மற்றும் வங்கி முகப்புகள் மற்றும் பகுதிநேர வங்கி முகப்பு வழியாக

  5. குறிப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட கடன் வசதிகளில் சர்க்கரை ஆலைகள் / ஒப்பந்த விவசாய நிறுவனங்கள் முதலியன அதன் விற்பனை மையங்கள் மூலமாக

  6. வேளாண் இடுபொருள் விநியோகஸ்தர்கள் உள்ள விற்பனை மையங்கள் மூலமாக

  7. வேளாண் இடுபொருள் விநியோகஸ்தர்கள் மற்றும் சந்தைகளில் மொபைல் ஃபோன் அடிப்படையில் பண மாற்றங்கள் மூலமாக

குறிப்பு – வங்கிகள் மற்றும் விவசாயிகளின் பரிவர்த்தனைச் செலவுகளை குறைக்க (v) (vi) & (vii) பிரிவுகளில் குறிப்பிடப்பட்டவற்றை உடனடியாக அறிமுகப்படுத்தலாம்.

6.2 முதலீட்டு நோக்கங்களுக்காக நீண்ட கால கடன்கள் நிரணயிக்கப்பட் தவணைகளில் எடுக்கப்படலாம்.

7. மின்னணு கிசான் கிரெடிட் கார்டு வழங்குதல்

இணைப்பில் பகுதி II-ல் குறிப்பிட்டுள்ளபடி எல்லா புது கிசான் கிரெடிட் கார்டு ஸ்மார்ட் கார்டாகவோ / பற்று அட்டையாகவோ வழங்கப்படவேண்டும். பழைய அட்டைகள் புதுப்பிக்கப்படும்பொழுது விவசாயிகளுக்கு ஸ்மார்ட் கார்டு / பற்று அட்டை வழங்கப்படவேண்டும்.

KCC-ன் மொத்த வரம்பில் குறுகிய கால கடன் வரம்பு மற்றும் காலக் கடன் வரம்பு என்ற இரு வேறு கூறுகள் அடங்கியுள்ளன. அவற்றிற்கு வெவ்வேறு வட்டி விகிதம் மற்றும் திருப்பிச் செலுத்தும் கால அளவும் உள்ளன. இவற்றிற்கான உபவரம்புகளுக்கு உட்பட்ட பரிவர்த்தனைகளை, தனித்தனியே கணக்கில் காட்டிடப் பொருத்தமான மென்பொருள் கொண்ட ஒரு கூட்டு அட்டை வெளியிடப்படும் காலகட்டம் வரை, புதிய/ புதுப்பிக்கப்படும் அட்டைகள் வழங்கும்போது உபவரம்புகளுக்கு உட்பட்ட இருவேறு மின் அட்டைகளையே வெளியிடலாம்.

8. செல்லுபடியாகும் காலம் / புதுப்பித்தல்

  1. வங்கிகள் KCC-ன் செல்லுபடியாகும் காலம் மற்றும் அவ்வப்போது அதன் சீராய்வைத் தீர்மானிக்கலாம்.

  2. பயிர் சாகுபடியின் நிலப்பரப்பு / பயிர் வகை மற்றும் கடனாளியின் செயல்பாடு இவற்றைப் பொருத்து, சீராய்வின் விளைவால், இந்த வசதி தொடரலாம், வரம்பு உயர்த்தப்படலாம் அல்லது வசதி விலக்கப்படலாம், வரம்பு நீக்கப்படலாம்.

  3. இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு, கடன் சீரமைப்பு வசதி அளிக்கப்பட்டிருக்கலாம் அல்லது காலக் கெடு நீட்டிக்கப்பட்டிருக்கலாம். அந்தசமயத்தில், விவசாயியின் கடன் கணக்கு செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் காலக்கட்டமும் (வரம்பு அளவு உயர்த்தப்படுவதோடு சேர்த்து) நீட்டிக்கப்படும். ஒரு பயிர்ப் பருவத்தைத் தாண்டி, இந்த வசதி நீட்டிக்கப்படுமானால், இந்த நீட்டிக்கப்பட்ட காலத்திற்குரிய மொத்தப் பற்றுத் தொகையும் தனியானதொரு காலக் கடன் கணக்கிற்கு மாற்றப்பட்டு, தவணை முறைகளில் அந்தக் கடனைத் திருப்பியளிக்க நிபந்தனை விதிக்கப்படும்.

9. வட்டி விகிதம்

வங்கிகள் கட்டுப்பாட்டுத் துறையின் (Department of Banking Regulation-DBR) தொகுப்பு (கடன் மீதான வட்டி குறித்த) வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வட்டி விகிதம் அமைந்திருக்கும்.

10. கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம்

10.1 எந்தப் பயிருக்காகக் கடன் வழங்கப்பட்டதோ அதற்கான உத்தேச அறுவடைக் காலம் மற்றும் சந்தைப்படுத்தும் காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, வங்கிகள் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தைத் தீர்மானிக்கலாம்.

10.2 முதலீட்டுக் கடனைப் பொறுத்தவரை, எந்த நடவடிக்கை / முதலீட்டிற்காக காலக் கடன் வழங்கப்பட்டதோ, அவை நடப்பிலுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில் பொதுவாக 5 ஆண்டுகளுக்குள் திருப்பிச்செலுத்தப்படலாம்.

10.3 நிதியளிக்கும் வங்கிகள் தனது விருப்புரிமையின் பேரில், முதலீட்டின் வகையைப் பொறுத்து, குறித்தகாலக் கடனைத் திருப்பியளிக்க, நீண்ட காலஅளவை நிர்ணயிக்கலாம்.

11. விளிம்புத் தொகை

இது வங்கியால் தீர்மானிக்கப்படும்.

12. பிணையம்

12.1 அவ்வப்போது இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் வழிகாட்டுதல்களில் குறிப்பிட்டுள்ளபடி கடன்களுக்கான பிணையம் நிர்ணயிக்கப்படும்.

12.2 பிணையத்திற்கான தேவைகள் பின்வரும் வகையில் இருக்கும்.

  1. சாகுபடியான பயிர் பிணையம் – கடன் அட்டை வரம்பு ரூ. 1 லட்சம் வரை வங்கிகள் விளிம்பு / பிணையத் தேவைகளை தள்ளுபடி செய்திடும்.

  2. கடன் வசூல் இணைக்கப்படிருத்தல் – வங்கிகள் பயிர் அடமானத்தின் பேரில் அட்டை மூலம் வரம்பு ரூ. 3 லட்சம் வரை இணைப் பிணையம் எதுவும் வலியுறுத்தத் தேவையில்லை.

  3. இணைப் பிணையம் – கடன் வசூல் இணைக்கப்படாதவைகளில் அட்டை வரம்பு ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமானால், கடன் வசூல் இணைக்கப்பட்டிருந்தவற்றில் அட்டை வரம்பு ரூ. 3 லட்சத்திற்கும் அதிகமானால், வங்கிகள் தம் விருப்பம்போல் இணைப் பிணையம் அளிக்குமாறு கேட்கலாம்.

  4. சில மாநிலங்களில் ஆன்லைன் மூலமாக நிலப்பதிவுகளில் அடமானத்தை ஏற்படுத்திட வசதி உண்டு. வங்கிகள் அத்தகு மாநிலங்களில் இவற்றை உறுதி செய்திடவேண்டும்.

13. இதர அம்சங்கள்

பின்வருவனவற்றில் சீரான நடைமுறை பின்பற்றப்படவேண்டும்.

13.1 மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கின்ற வகையில் வட்டி விகிதம் குறைக்கப்படுதல்/ உரிய காலத்தில் கடன் திருப்பியளித்தால் அதற்கு ஊக்கத் தொகை*. வங்கிகள் இத்தகு திட்டங்களுக்கு அதிக விளம்பரம் கொடுத்து அதிக அளவில் விவசாயிகள் பலன்பெற வழிவகை செய்திடவேண்டும்.

(* தற்சமயம் இது சிறுநிதிவங்கிகள் மற்றும் தனியார்துறை வங்கிகளின் நகர்ப்புறக் கிளைகளுக்குப் பொருந்தாது.)

13.2 கட்டாயமாக்கப்பட்ட பயிர் காப்பீடு தவிரவும், கடன் அட்டைதாரர் ஏதாவதொரு சொத்துக் காப்பீடு, விபத்துக் காப்பீடு (PAIS உட்பட) மருத்துவக் காப்பீடு வசதிகளையும் பெறுவதற்கான வாய்ப்பினை அளித்து, அவற்றிற்குரிய பிரீமியம் தொகையை KCC அட்டை / கணக்கு மூலமாகவே செலுத்திடவும் வழிவகை செய்திடவேண்டும். திட்டத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப பிரீமியம் தொகை விவசாயி / வங்கியால் செலுத்தப்படவேண்டும். இத்தகு காப்பீடு வசதிகள் இருப்பது பயனாளி விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்களின் ஒப்புதல் இந்தக் காப்பீட்டு வசதிகளுக்கு (பயிர்க் காப்பீடு தவிரவும், ஏனெனில் அது கட்டாயம்) விண்ணப்பமளிக்கும்போதே பெறப்படவேண்டும்.

13.3 KCC கடன் முதல் முறையாக பெறும்போது, ஒரே தடவை அளிக்கக்கூடிய ஆவணங்கள் முறையாக அளிக்கப்படவேண்டும். அதன்பிறகு, வளர்க்கப்படும் பயிர் அல்லது உத்தேச சாகுபடிக்கான பயிர் குறித்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் உறுதிமொழி அளித்தால் மட்டுமே போதுமானது.

14. வாராக் கடனாக கணக்கை வகைப்படுத்துதல்

14.1 வருவாய் – சொத்து வகைப்படுத்தல், இருப்பு ஏற்பாடுகள் போன்ற நடப்பிலுள்ள விவேக நடைமுறைக் கொள்கைகள் KCC திட்டக் கடன்களுக்கும் பொருந்தும்.

14.2 விவசாயக் கடன்களுக்கு உள்ளது போலவே வட்டி விகிதம் சீராக விதிக்கப்படும்.

15. பரிசீலனைக் கட்டணம், ஆய்வுக்கான செலவுகள் இதர கட்டணங்கள் வங்கியால் தீர்மானிக்கப்படும்.

16. KCC திட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை அமல்படுத்தும்போது உள்ள இதர கட்டளைகள்.

16.1 கிடங்கில் வைக்கப்பட்டுள்ள விளை பொருளிற்கான ரசீதின் பேரில் விவசாயி கடனுக்காக விண்ணப்பித்தால், நடைமுறையிலுள்ள செயல்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வங்கிகள் அந்த கோரிக்கைகளை ஏற்கலாம். எவ்வாறாயினும், இத்தகு கடன்கள் வழங்கப்பட்டால், அவை பயிர்க்கடன் கணக்குடன் (ஏதேனும் இருப்பின்) இணைக்கப்படவேண்டும். விவசாயி விரும்பினால், இந்த அடமானக்கடன் வழங்கும்போதே, பயிர்க்கடன் கணக்கையும் முடித்துக் கொள்ளலாம்.

16.2 நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா KCC அட்டைகளை தனது வர்த்தகப்பெயரின் கீழ் அனைத்து வங்கிகளுக்கும் அளிக்கலாம்.


அளிக்கும் வழிவகைகள் (Delivery Channels) – தொழிநுட்ப அம்சங்கள்

1. அட்டைகள் வெளியிடுதல்

இந்தத் திட்டத்தின் பயனாளிகளுக்கு ஸ்மார்ட் அட்டை / பற்று அட்டை (ஏடிஎம்-ல் பயன்படுத்தக்கூடியவை / கையடக்கக் கருவியில் பயன்படுத்தக் கூடிய பையோமெட்ரிக் அட்டைகள் இவற்றில் விவசாயி பற்றிய அடையாள விவரங்கள், சொத்து, நிலப்பரப்பு மற்றும் கடன் விவரங்கள் போதுமான அளவில் இவற்றில் பதிவு செய்து வைக்க முடியும்). எல்லா விவசாயக் கடன் அட்டைதாரர்களுக்கும் பின்வரும் ஏதாவது ஒருவகையிலான அல்லது அவற்றின் கூட்டு வகையிலான அட்டைகள் வழங்கப்படும்.

2. அட்டையின் வகை

காந்தப்பட்டையுடைய தனிநபர் அடையாள எண்ணுடன் (PIN) பன்னாட்டு தர நிறுவனங்கள் அளிக்கும் பன்னாட்டு அடையாள எண்ணுடன் (ISO IIN) கூடிய அட்டை இவற்றை எல்லா ஏடிஎம்-கள், மைக்ரோ ஏடிஎம்களில் பயன்படுத்த இது ஏதுவாக இருக்கும்.

ஆதார் அடையாள எண்ணை பையோமெட்ரிக் அங்கீகாரமாகப் பயன்படுத்த வங்கிகள் விரும்பினால், காந்தப்பட்டையுடன் PIN மற்றும் ISO IIN-ஐ இணைத்து அளித்து UIDAI (ஆதார் அடையாளம்)-ஐப் பயன்படுத்த ஏதுவாக அட்டைகளை வெளியிடலாம்.

வங்கிகள் காந்தப்பட்டையுடன் கூடிய பையோமெட்ரிக் பற்று அட்டைகளை மட்டுமே, வாடிக்கையாளர்களுக்கு அவரவர் வகைகளின் அடிப்படையில் வழங்கிடலாம். UIDAI என்பது பரவலாக்கப்படும்வரை, மையப்படுத்தப்பட்ட பையோமெட்ரிக் கட்டமைப்பை உபயோகித்து பரஸ்பரப் பயன்பாடு வசதியின்றியும் வங்கிகள் அட்டைகளை வெளியிடலாம்.

வங்கிகள், EMV (யூரோ, மாஸ்டர் கார்டு, VISA போன்ற உலகத் தரவரிசைகளில் ஒருங்கிணைக்கப்பட்ட கடன் வழிகளில் பரஸ்பரப் பயன்பாடுடன் கூடிய) மற்றும் RUPAY உபயோகத்திற்கு ஏற்ற சிப் அட்டைகளாக, காந்தப்பட்டை மற்றும் PIN, ISO IIN உடன் வெளியிடலாம்.

பையோமெட்ரிக் அங்கீகாரம் மற்றும் ஸ்மார்ட் அட்டைகள் IDRBT மற்றும் IBA பரிந்துரைக்கும் பொதுவான தரநிலைகளைப் பின்பற்றலாம். கொள்முதல் முகமைகளுடன் பரிவர்த்தனை நிகழ்த்துவதோடு அவர்களின் விளைபொருட்களைச் சந்தைகளில் விற்பனை செய்கையில் விற்ற தொகையை வரவு வைக்கவும் இந்த அட்டைகளைப் பயன்படுத்திடமுடியும்.

3. அளிக்கும் வழிவகைகள்

விவசாயிகள் கிசான் கிரெடிட் கார்டு கணக்குகளில் திறம்பட பரிவர்த்தனைகளை நடத்திட கிசான் கிரெடிட் கார்டை பின்வரும் வகையில் பயன்படுத்திடலாம்.

  1. ஏடிஎம்கள் / மைக்ரோ ஏடிஎம்களிலிருந்து பணம் எடுத்தல்

  2. வங்கி வர்த்தகத் தொடர்பாளர் மூலம் ஸ்மார்ட் அட்டைகளைப் பயன்படுத்தி பணம் எடுத்தல்

  3. கொள்முதல் வியாபாரிகளின் விற்பனை முனையத்திலுள்ள எந்திரங்கள்

  4. IMPS / IVR உடன் கூடிய மொபைல் பேங்கிங்

  5. ஆதாருடன் இணைந்த அட்டைகள்

4. மொபைல் வங்கி / இதர வழிவகைகள்

KCC அட்டைகளில் மொபைல் பேங்கிங் வசதிகளை அளித்தல். கணக்குகளிலும் NPCI-ன் IMPS வசதியுடன் வங்கிக் கணக்குகளிடையே பணப்பரிமாற்றும் செய்வதோடு வர்த்தக நடவடிக்கைகளுக்கு விவசாய இடுபொருள் கொள்முதல் போன்றவைகளுக்கும் பணப்பரிவர்த்தனை செய்திட இவை உதவிகரமாக இருக்கும்.

மக்கள் பரவலாக பாதுகாப்பாக உணர்ந்து ஏற்றுக்கொள்ள மொபைல் பேங்கிங் என்பது USSD தளத்தில் அமைந்திருப்பது நலம். வங்கிகள் இவற்றை SMS அடிப்படையிலும் தகவல் அளித்து / பெற்று செயல்படும் வகையில் அன்என்கிரிப்டெட் (Unencrypted) அமைக்கலாம். சமீபத்தில் பரிவர்த்தனைகளில் தளர்த்தப்பட்ட வரம்புகளுக்கு உரிய வகையில் இவற்றைப் பயன்படுத்தலாம். இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் / விதி முறைகளுக்குட்பட்டு, வங்கிகள் அன்என்கிரிப்டெட் வகையிலும் மொபைல் பேங்கிங் வசதியை அளிக்கலாம்.

மொபைல் அடிப்படையிலான பரிவர்த்தனைகள் KCC-யில் SMS அடிப்படையில் MPIN முறை அங்கீகரித்தல் தொடரும். வெளிப்படைத் தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்திட IVR வட்டார மொழிகளில் அளிக்கப்படவேண்டும். மொபைல் பேங்கிங் முலம் பணப்பட்டுவாடா மற்றும் தீர்வு முறையை ஊக்குவிக்க வங்கிகள் வாடிக்கையாளர் கல்வியை மேம்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். வங்கிகளிடம் தற்சமயம் உள்ள கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி KCC அட்டைதாரர்களுக்குப் பின்வரும் ஏதாவதொரு வகை அல்லது ஒருங்கிணைந்த பல்வகை வசதியுடைய அட்டைகளை வங்கிகள் வெளியிடவேண்டும்.

  • ஏடிஎம்கள் / மைக்ரோ ஏடிஎம்களில் வரவுக்குட்பட்டு பணமெடுக்க உதவிடும் பற்று அட்டைகள் (காந்தப்பட்டையுடன் PIN உடன் கூடிய)

  • காந்தப்பட்டையுடன் பையோமெட்ரிக் அங்கீகாரமுடன் கூடிய பற்று அட்டைகள்

  • வங்கி வர்த்தகத் தொடர்பாளர்கள் கொள்முதல் விற்பனையாளர்கள் வைத்துள்ள சந்தை வணிகர் விற்பனை முனைய எந்திரங்களில், பரிவர்த்தனை நடத்திட உதவிடும் ஸ்மார்ட் அட்டைகள்

  • EMV பயன்பாடுடைய சிப் காந்தப்பட்டை, PIN, ISO IIN உடைய அட்டைகள்

அழைப்பு மையங்கள் உடைய வங்கிகள், குரல் வழிகேட்டு, பதில் தரும் வசதி, மின்னஞ்சல் அடிப்படையிலான வங்கி வசதி, PIN-ஐச் சரிபார்க்க வங்கியிடமிருந்து அழைப்பு பெறும் அமைப்பு ஆகியவற்றின் மூலம் பாதுகாப்பாக SMS அடிப்படையிலான மொபைல் வங்கி வசதியை அட்டைதாரர்களுக்கு அளிக்கலாம்.


இணைப்பு

கிசான் கிரெடிட் கார்டு – முதன்மைச் சுற்றறிக்கைக்கான
ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றறிக்கைகளின் பட்டியல்

வ. எண் சுற்றறிக்கை எண் தேதி பொருள்
1. RPCD.No.PLFS.BC.20/05.05.09/98-99 05.08.1998 கிசான் கிரெடிட் கார்டு
2. RPCD.No.PLFS.BC.99/05.05.09/99-2000 06.05.2000 கிசான் கிரெடிட் கார்டு திட்டம் – மாற்றியமைக்கப்பட்டது
3. RPCD.No.PLFS.BC.63/05.05.09/2000-01 03.03.2001 கிசான் கிரெடிட் கார்டுகள்
4. RPCD.No.PLFS.BC.64/05.05.09/2001-02 28.02.2002 கிசான் கிரெடிட் கார்டு
5. RPCD Plan.BC No.87/04.09.01/2003-04 18.05.2004 வேளாண் கடன் - விவசாயக் கடன்கள் – விளிம்புத் தொகை / பிணையத் தேவைகள் விலக்கு
6. RPCD.No.PLFS.BC.38/05.05.09/2004-05 04.10.2004 கிசான் கிரெடிட் கார்டின் கீழ் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு கால கடன்கள் வழங்கப்படுவதற்கான திட்டம்
7. RPCD.No.PLFS.BC.85/05.04.02/2009-10 18.06.2010 வேளாண் கடன் - விவசாயக் கடன்கள் – விளிம்புத் தொகை / பிணையத் தேவைகள் விலக்கு
8. RPCD FSD BC No.77/05.05.09/2011-12 11.05.2012 மாற்றியமைக்கப்பட்ட கிசான் கிரெடிட் கார்டு திட்டம்
9. RPCD FSD BC No.23/05.05.09/2012-13 07.08.2012 மாற்றியமைக்கப்பட்ட கிசான் கிரெடிட் கார்டு திட்டம்
10. FIDD FSD BC No.18/05.05.010/2016-17 13.10.2016 மாற்றியமைக்கப்பட்ட கிசான் கிரெடிட் கார்டு திட்டம்

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?