10 ரூபாய் நாணயங்கள் தொடர்ந்து சட்டப்படி செல்லத்தக்கவை அவற்றை பொதுமக்கள் தொடர்ந்து ஏற்கவேண்டும் - இந்திய ரிசர்வ் வங்கி - ஆர்பிஐ - Reserve Bank of India
10 ரூபாய் நாணயங்கள் தொடர்ந்து சட்டப்படி செல்லத்தக்கவை அவற்றை பொதுமக்கள் தொடர்ந்து ஏற்கவேண்டும் - இந்திய ரிசர்வ் வங்கி
நவம்பர் 20, 2016 10 ரூபாய் நாணயங்கள் தொடர்ந்து சட்டப்படி செல்லத்தக்கவை இந்திய ரிசர்வ் வங்கி இந்திய அரசால் தயாரிக்கப்பட்ட நாணயங்களைப் புழக்கத்தில் விடுகிறது. இந்த நாணயங்கள் தனிப்பட்ட சிறப்பு அம்சங்களைக் கொண்டவை. புதிய மதிப்பிலக்கங்களில், புதிய வடிவங்களில் பொருளாதார, சமுதாய, கலாசார கருத்துக்களைப் பிரதிபலிக்கும் வகையில், பொதுமக்களின் பரிவர்த்தனைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நாணயங்கள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. நாணயங்கள் நீண்ட காலத்திற்குப் புழக்கத்திலிருக்கும். ஆகவே, வெவ்வேறு வடிவங்கள், அளவுகளில் உள்ள நாணயங்கள் புழக்கத்திலிருக்க வாய்ப்புண்டு. இதில் செய்யப்பட்ட ஒரு மாற்றம் என்னவெனில், ஜூலை 2011-ல் நாணயங்களில் “ரூபாய்“ குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது. உதாரணமாக, ரூ.10 நாணயங்கள் ரூபாய் குறியீட்டுடனும், ரூபாய் குறியீடு இல்லாமலும் வெளியிடப்பட்டுள்ளன. அவை சற்றே மாறுபட்டுத் தோன்றினாலும், இரண்டுமே சட்டப்படி செல்லுபடியாகக் கூடியவை மற்றும் பரிவர்த்தனைகளுக்கு ஏற்றவை. அதிகமாக விவரங்களை அறியாத சிலர், நாட்டின் சில பகுதிகளில், இத்தகு நாணயங்களின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகங்களைச் சாதாரண மனிதர்கள் (சிறு வியாபாரிகள் உட்பட) மனதில் உருவாக்கி, இந்த நாணயங்களின் புழக்கத்திற்கு குந்தகம் விளைவித்து வருவதாகத் தெரியவந்துள்ளது. இந்தக் குழப்பம், சந்தேகம் தவிர்க்கப்படவேண்டியதாகும். பொதுமக்கள் இத்தகு முழுவிவரங்களை அறியாததால் தோன்றும் கோட்பாடுகளுக்கு மதிப்புத் தராமல், அவற்றை ஒதுக்கித் தொடர்ந்து இந்த நாணயங்களைத் தங்களின் அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் தயக்கமின்றி, சட்டப்படி செல்லுபடியாகும்படி பயன்படுத்திட இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்துகிறது. இந்த நாணயங்கள் பற்றி மேலும் அறிய கீழ்க்கண்ட இணையதள இணைப்புகளைப் பார்க்கவும். /en/web/rbi/press-releases
(அல்பனா கில்லவாலா) பத்திரிக்கை வெளியீடு: 2016–17/1257 |