இந்திய ரிசர்வ் வங்கி நாணயங்களைப் பகிர்ந்தளிக்க முகமைகளை (agencies) ஏற்பாடு செய்கிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
இந்திய ரிசர்வ் வங்கி நாணயங்களைப் பகிர்ந்தளிக்க முகமைகளை (agencies) ஏற்பாடு செய்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி சோதனை அடிப்படையில், நாணயங்களைப்பகிர்ந்தளிக்க முகமைகளிடமிருந்து விண்ணப்பங்களைக் கேட்டுள்ளது. அந்த முகமைகளுக்கு, நாணயங்களைப் பகிர்ந்தளிப்பதற்குச் சேவைக்கட்டணம் அளிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ரிசர்வ் வங்கி தன்னுடைய சேவைச் சாளரங்களில் பெற்றுக் கொள்ளப்படும் நாணயப் பை ஒன்றுக்கு ரூ.250 சேவைக் கட்டணமாகக் கொடுக்கும். எனினும் முகமைகள் நாணயங்களைப் பகிர்ந்தளிப்பதற்குக் கட்டணம் / தரகு எதுவும் வசூலிக்காமல் பொதுமக்களுக்கு நாணயங்களை அதன் முகமதிப்புப்படியே வழங்க வேண்டும். நாணயங்கள் ரூ.1, 2, 5 என்ற இலக்க மதிப்பிலும் 25 பைசா, 50 பைசா என்ற மதிப்பிலும் கிடைக்கும்.
பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள், வட்டார கிராமப்புற வங்கிகள், புகழ் வாய்ந்த தேசிய / வட்டார சமுதாய நல நிறுவனங்கள் (முன்னுரிமை அரசு உதவிபெறும் நிறுவனங்கள்) ஆகியவை ரிசர்வ் வங்கியை அணுகி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு/ பொதுமக்களுக்கு வழங்குவற்கென நாணயங்களைப் பெறலாம். இருப்பினும் தெரிந்தெடுக்கப்பட்ட முகமைகள் சில நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும். நாணயங்களை ரிசர்வ் வங்கியில் பெற்றுக் கொள்ளும்போது, நாணயப் பைகளுக்கு உரிய முகமதிப்பினைச் செலுத்த வேண்டும் என்பதும் அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும். ஒவ்வொரு பையின் நாணய மதிப்பும் பின் வருமாறு:
25 பைசா |
ரூ.1250 |
50 பைசா |
ரூ.2500 |
1 ரூபாய் |
ரூ.2500 |
2 ரூபாய் |
ரூ.5000 |
5 ரூபாய் |
ரூ.10,000 |
ரிசர்வ் வங்கி ஒரு நாணயப் பைக்குரிய சேவைக்கட்டணமாகிய ரூ.250ஐ அவர்கள் பெற்றுக்கொண்ட நாணயங்களுக்கு மாதந்தோறும் ஏற்றவாறு வழங்கும். இருப்பினும் போக்குவரத்து, பாதுகாப்பு போன்ற ஏற்பாடுகளை அந்தந்த முகமைகள் தங்கள் சொந்த செலவிலேயே மேற்கொள்ளவேண்டும்.
மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இந்த வசதியை முதலில் ஆறுமாதங்களுக்கு நீட்டிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்தகாலச் செயல்பாட்டுப் பதிவுகளின் அடிப்படையில் இந்த முகமைகளை ரிசர்வ் வங்கி தேர்ந்தெடுக்கும். வங்கிகள்/நிறுவனங்கள் சரியாக நாணயங்களைப் பொதுமக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் செயல்பாட்டின் அடிப்படையில் தொடக்க நிலைக்காலம் முடிந்த பின் அதனைப் புதுப்பிக்கக் கூடும். எந்த நேரத்திலும் ஒரு மாத முன்னறிவிப்புடன் இந்த வசதியை நிறுத்திவிடும் உரிமை ரிசர்வ் வங்கிக்கு உண்டு. எல்லாச் செயல்பாடுகளிலும் இந்த வசதியை முடிவுக்குக் கொண்டுவருவது உட்பட ரிசர்வ் வங்கியின் முடிவே இறுதியானது.
ஆர்வமுடைய நிறுவனங்கள் அகமதாபாத், பெங்களூர், போபால், புவனேசுவரம், சண்டிகார், சென்னை, கெளஹாத்தி, ஜெய்ப்பூர், ஜம்மூ, கான்பூர், கோல்கத்தா, நாக்பூர், புதுடில்லி, மும்பை, நவி மும்பை (பேலாபூர்), பாட்னா, திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலுள்ள வட்டார மேலாளர்களையோ அல்லது தலைமைப் பொதுமேலாளர்களையோ (பண நாணய மேலாண்மைத்துறை, இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய அலுவலகம், மும்பை-400001) அணுகவேண்டும் என ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.
பொதுமக்களுக்கு நாணயங்கள் சென்றடைய வேண்டும் என்பதற்குரிய செயல்பாடுகளில் ஒன்றாக மும்பையிலுள்ள அஞ்சல் நிறுவனத்துடன் இணைந்து மகாராட்டிராவிலும் கோவாவிலும் நாணயங்கள் பகிர்ந்தளிக்கிறது மற்றும் ஹிமாசலப் பிரதேசத்தில், ஹிமாசலப்பிரதேச சாலைப் போக்குவரத்துக் நிறுவனத்துடனும் இணைந்து செயல்படுகிறது.
அல்பனா கில்லாவாலா
பொது மேலாளர்
பத்திரிகை வெளியீடு-2001-2002/230